மனிதனுக்குள் நடக்கும் உரையாடலை பேசுவது தான் இந்த புத்தகத்தின் அடிப்படை நோக்கம்..

நேரடியான உரையாடலில் எல்லாமே நமக்கு தெரிய வரும். உடல் மொழியில் சொல்ல வேண்டியதை சூசகமாக புரிய வைப்பார்கள்.

ஆனால் நாம் நேரடியாக பேசும் போது நம் மனதுக்குள் ஒரு உரையாடல் தனியாக நடக்கும். அதை அப்பட்டமாக, பிரிச்சு மேய்ந்து சொல்லி இருக்கிறார்.

அம்மா அம்மாவாக, அப்பா அப்பாவாக, நண்பன் நண்பனாக எல்லா நேரங்களிலும் அதே உறவில் இருக்க மாட்டார்கள். நம்மை துரோகத்தின் எல்லைக்கும் கொண்டு செல்வார்கள், அன்பை வைத்து நம்மை அடக்கவும் செய்வார்கள். இவை எல்லாம் அவர்கள் மனதுக்குள் நடக்கும் உரையாடல் வழியாக, நமக்குள் அமைதியாக திணிப்பார்கள்.

எது சமூகம், எது பெண்ணியம், எது ஆண்மையின் பங்கு எல்லாத்தையும் விவரித்து சொல்லி இருக்கார். அதில் வெளியே பேசும் முக மூடிகளும், அவர்கள் மனதுக்குள் நடக்கும் சம்பவங்களையும் நிதானமாக சொல்லி விட்டார்.

ஒரு குறிப்பிட்ட ரகமான சிந்தனையை நாகரிகமானதாக உருவகப்படுத்தி, உலகம் முழுவதிலுமுள்ளவர்கள் அதை அணிந்து கொண்டு தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளும் முயற்சியில் தான் பலரும் இருக்கிறார்கள்.

எந்த சிந்தனை நமக்கானது, எந்த சிந்தனை அடுத்தவர்கள் கிட்ட வாங்கினது என்று தெரியாமல் சிந்தனையின் வெளிச்சமாக தன்னை வெளிப்படுத்த முயலும் போது நடக்கும் சண்டையில் இருக்கும் வெற்றி, தோல்வியில் தான் மொத்த வாழ்க்கையும் அமைத்துக் கொள்கிறோம்.

இதில் சிலர் மட்டும் தான் தனக்கான சிந்தனையாக இது தான் என்று எடுத்துக் கொண்டு நிதானமான உரையாடலாக உறவுக்குள் வாழ்கிறார்கள்.

கதையாக படிக்க ஒன்றும் இல்லை… ஒவ்வொரு மனிதனின் சிந்தனையின் உளவியலை சொல்ல ஒரு நாவலை எழுதி விட்டார் எழுத்தாளர்..

மனிதனின் சிந்தனைக்குள் நடக்கும் உள்ளே வெளியே சூதாட்டம் தான் இந்த நாவல்.!


காயத்ரி மஹதி

 

நூல் தகவல்:
நூல்: காகித மலர்கள்
பிரிவு : நாவல்
ஆசிரியர்: ஆதவன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
பதிப்பு ஆண்டு: 2014
பக்கங்கள் :  392
விலை : ₹ 440
Buy On Amazon